Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Thursday, January 1, 2015

ஆட்டோ

சித்திரை வெயில் மண்டையைப்  பிளந்து கொண்டிருந்தது. மாரி  சலிப்புடன்  ஆட்டோவை சாலை ஓரமாக உருட்டிக்  கொண்டிருந்தான். சவாரி ஏதாவது  கிடைக்குமா என்று  அவன் கண்கள்  இங்கும் அங்கும் அலைபாய்ந்தன. மாரியின் மனைவி அவனுக்காக கட்டித்  தந்திருந்த குழம்பு சோறும், வெண்டைக்காய்  பொரியலும் அவன் வயிற்றில்  உட்கார்ந்து கண்களை சுழல விட்டுக்கொண்டிருந்தது. 

தெருவில் ஈ காக்காய் இல்லை. மாரியின் ஆட்டோ மட்டும் 'டுக்டுக்டுக்' என்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. சற்று தூரத்தில் வியர்க்க விருவிருக்க ஓர் உருவம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருப்பதை கவனித்த மாரி ஆட்டோவை வேகமாக அந்த பக்கம் செலுத்தினான்.

அங்கு ஒரு நடுத்தர வயது பெண்மணி புடவைத் தலைப்பில் வழிந்துகொண்டிருக்கும் வியர்வையை துடைத்தபடி கையில் ஒரு கருப்பு குடையுடன் சென்று கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று "அம்மா, எங்க போகணும்?" என்றான்.

ஏற இறங்க ஆட்டோவைப் பார்த்தாள் . பின் வெயிலைப் பார்த்தாள் . ஒரு வினாடி தயங்கி பின், "அண்ணா நகர் போகணும். எவ்வளவு?" என்றாள்.

மாரி "மீட்டர் மேல் 10 ரூபா போட்டு தாங்க மா." என்றான். சட் என்று அவளும் உள்ளே ஏறி அமர்ந்தாள். ஆட்டோவும் அண்ணா நகர் நோக்கி திரும்பியது.

" அண்ணா நகர் ல எங்கம்மா போகணும்?"
"எஸ். எஸ் பள்ளிப்பா"
"என்னம்மா, அங்க பாப்பா வ இட்டார போறீங்களா ? இப்போ ஸ்கூல் லீவு தானே?"
"ஆமாம் பா. ஏதோ டான்ஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு மத்த பசங்க கூட பிராக்டிஸ் பண்ணிட்ருக்கா," என்றாள்  அவள்.
" நல்லது மா. இந்த காலத்துப்  பசங்க நெறைய விஷயங்கள் செய்யறாங்க. என் பொண்ணு கூட இப்படிதான் மா," என்றான் மாறி பெருமையாக.
"ஓ! அப்படியா? என்ன பண்றாங்க உங்க பொண்ணு?"
"ரெண்டாவது படிக்கராம்மா. கான்வென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வச்சுருக்கேன். இங்கிலீஸ் என்னமா பேசரா  தெரியுமா? கேக்கவே பெருமையா இருக்கு."
"வெரி குட்," என்று நிறுத்திக் கொண்டாள்  அவள்.
"ஆமாம் மா. எனக்கு எழுதப்  படிக்கத்  தெரியாது மா. என் பொண்டாட்டிக்கும் தெரியாது. எங்கள மாதிரி பொண்ணும் கஷ்டப்படக் கூடாதில்லைம்மா? அதான், நாங்க கஷ்ட பட்டாலும் பரவாயில்லன்னு பாப்பாவ நல்ல ஸ்கூல்கு அனுப்பறோம்," என்றான்.
"நல்ல விஷயம் தான். நல்ல வருவா உங்க பொண்ணு," என்று செல்போனை நோண்டிக்கொண்டே பதிலளித்தாள்.
"காலேல 5 மணிக்கு வண்டி எடுத்தால் இரவு  11 மணி வரைக்கும் ஓட்டுவேன்ம்மா. என்  பொண்டாட்டி  ஆறு வீட்டுல வேலை செய்யரா. ஸ்கூல் பீஸ் கட்டவே முக்கால் வாசி வருமானம் போய்டுது. போக போக எப்படி சமாளிக்க போறேனோ," என்று கவலை ஒழுக பேசினான் மாரி.

என்ன இந்த ஆடோக்கரன் வாயே மூடாமல் பேசறான்? ஒழுங்கா பஸ்சிலேயே போயிருக்கனும் என்று மனதிற்குள் சலித்துக்கொண்டு கடனே என்று அவன் பேசுவதற்கு "உம் " கொட்டிக்கொண்டிருந்தாள். 'இன்னும் 10 நிமிடம் மேல் சவாரி செய்ய வேண்டுமே... இந்த ஆடோக்காரன் மொக்கையை கேட்பதற்கு யார்கூடையவது  போனில் பேசலாம்,' என்று தன் தங்கைக்கு போன் செய்தாள். அவள் அதிர்ஷ்டம், தங்கை அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து அம்மாவிற்கு போன் செய்யலாம் என்று பார்த்தால், மணி 1.30. கண்டிப்பாகத் தூங்கிக்கொண்டிருப்பாள். கணவருடன் பேசலாம் என்று பார்த்தல், அவர் முக்கியமான விஷயதுக்கு அழைத்தாலே, "ஏன்டி ஆபீஸ் நேரத்துல போன் பண்ணி உயிரை வாங்கர ?" என்று எரிந்து விழுவார். வேறு தோழிகளுடன் வம்பு பேசவும் அவளுக்கு இப்போது மனமில்லை. தலை எழுத்தே என்று மீண்டும் "உம் " கொட்ட தொடங்கினாள்.

"என்னம்மா, நான் ரொம்ப பேசறேனா ? என்னமா செய்யறது? எப்போதும் என் பொண்ணு நெனைப்பவே இருக்கும்மா," என்று பேசிக்கொண்டே போனான் மாரி.

இதோ ஸ்கூல் வந்து விட்டது. பர்சிலிருந்து மீட்டர் காட்டின தொகையும், கூட 10 ரூபாயும் எடுத்து வைத்துக்கொண்டு தப்பித்து ஓட தயாரானாள்.

"இன்னிக்கு என் பொண்ணு பிறந்தநாள் மா. ஏதோ பார்பி பொம்மையாமே. அது வேணும்ன்னு ஆசைப் பட்டா. கடைல போய் கேட்டா 500 ருபாய்ன்னு சொல்றாங்க மா. நைட்டு வேற ஹோட்டல்க்கு கூட்டி போறேன்னு சொல்லி இருக்கேன். கையில அவ்ளோ பணம் இல்ல. அதான் 5 நாளா  ராப்பகலா தூங்காம வண்டி ஒட்றேன்மா. தூக்கம் கண்ண இழுக்குது. அதான் மா பேசிட்டே வந்தேன். தப்பா நெனைச்சுகாதீங்க மா," என்று மாரி  தழுதழுத்தான்.

அவளுக்கு சுருக் என்று இருந்தது, "ச்ச, இவரை இப்படி தப்பா நெனைச்சுடோமே" என்று நினைத்து கூட ஒரு 100 ருபாய் சேர்த்து கொடுத்து " நல்ல கொண்டாடுங்க உங்க பொண்ணு பிறந்த நாளை" என்று கூறி பள்ளிக்குள் சென்றாள். "ஏதோ நம்மால் இயன்றது," என்று மனதிற்க்குள் சற்று பெருமிதம் அடைந்தாள்.

                                            ******************************
"கே. ம். ஆஸ்பத்திரி போகணும். வரிங்களா?"
"வாங்க சார். மீட்டர் மேல 10 ரூபா போட்டு குடுங்க," என்று ஆட்டோவை எடுத்தான் மாரி. உடனே அடுத்த சவாரி கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. பள்ளி வாசலிலிருந்து ஆட்டோவை ஆஸ்பத்திரி பக்கம்  திருப்பினான்.
"என்ன சார், செக்அப் போறீங்களா?"
"இல்லப்பா, தெரிஞ்சவங்க அங்க அட்மிட் ஆகியிருக்காங்க. அவங்கள பார்க்க போறேன்," என்றார்.
"நல்ல ஆஸ்பத்திரி சார். என் அம்மாவுக்கு கூட உடம்பு சரி இல்ல சார். அரசு ஆஸ்பத்திரியில சரியாய் வைத்தியம் பாக்கல. தனியார் ஆஸ்பத்திரியில இப்போ சேர்த்துர்கோம் சார் . 10 நாள் ஆவுது."
"ஐயோ பாவமே...இப்போ எப்புடி இருக்காங்க?"
"இன்னும் குணமாகல சார். ஆஸ்பத்திரிலதான் இருக்காங்க. செலவு கட்டுப்படி ஆகலசார். என் பொண்டாட்டிய அங்க உட்க்கார வச்சுட்டு நாலு நாளா ராப்பகலா வண்டி ஓட்டறேன் சார்....."